என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
தொடர்ந்து ஏமாற்றும் மழை 49 அடியாக சரிந்த வைகை அணை நீர்மட்டம்
- இந்த ஆண்டு தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.02 அடியாக உள்ளது.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை தொடங்கியபோதும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயராமல் உள்ளது.
வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக போதிய அளவு நீர்மட்டம் இருந்ததால் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.02 அடியாக உள்ளது. வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.60 அடியாக உள்ளது. 404 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 74.88 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.






