என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளியூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதை கண்டித்து லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
    X

    வெள்ளியூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதை கண்டித்து லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்

    • சவுடு மண் மூன்று அடி மட்டுமே அள்ள வேண்டும் என்பது கனிமவளத்துறையின் விதி ஆகும்.
    • போராட்டத்தால் சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் ஏரியில் திருவள்ளூர் மாவட்ட கனிமவளத் துறை சார்பாக சவுடு மண் எடுக்க அனுமதி அளித்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த ஏரியில் ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் லாரிகளுக்கு சவுடு மண் அள்ளப்படுகிறது. இவ்வாறு அள்ளப்படும் சவுடு மண் மூன்று அடி மட்டுமே அள்ள வேண்டும் என்பது கனிமவளத்துறையின் விதி ஆகும்.

    ஆனால், நாள்தோறும் பல அடி அழத்துக்கு மண் அள்ளப்பட்டதாகவும், இந்த ஏரிக்கு அருகிலே உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மகளிர் உயர்நிலைப்பள்ளி கட்டிடங்கள் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டி இன்று மதியம்

    சவுடு மண் குவாரியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குவாரியை உடனடியாக மூட வேண்டும் என கோரிக்கை வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    சம்பவ இடத்துக்கு வெங்கல் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இருப்பினும், கிராம மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சவுடு மண் குவாரிக்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வருவாய்த்துறை, கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீரென தாமரைப்பாக்கம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினையால் சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

    இதன் பின்னர், சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ்குமார் தலைமையில் வருவாய் துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது கிராம மக்கள் குவாரியை உடனடியாக மூடினால் மட்டுமே தொடர் போராட்டத்தை கைவிடுவோம்! என உறுதியுடன் கூறினர். இதனை ஏற்று வருவாய்த்துறை அதிகாரிகள் தங்களது மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு தற்காலிகமாக சவுடுமண் குவாரியை மூட உத்தரவிட்டனர். இதனால் ஏரியில் இருந்த லாரிகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. இதன்பின்னர், ஏரிக்குள் லாரிகள் செல்லாத வண்ணம் பள்ளம் வெட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

    இப்பிரச்சனையால் இன்று மதியம் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×