என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூர் அருகே லாரி மோதி 3 மாத கர்ப்பிணி பலி- கணவர் படுகாயம்
    X

    மீஞ்சூர் அருகே லாரி மோதி 3 மாத கர்ப்பிணி பலி- கணவர் படுகாயம்

    • விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
    • தகவல் அறிந்ததும் பொன்னேரி எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போனில் பேசி சமாதானப்படுத்தினார்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த கல்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அஜித் (வயது 25). இவரது மனைவி ஐஸ்வர்யா (22). இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஐஸ்வர்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மீஞ்சூரை அடுத்த பட்ட மந்திரி சாலையில் இருந்து வீடு நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது பின்னால் சாம்பல் கழிவுகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அஜித், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் லாரியில் சிக்கி நசுங்கினர். சம்பவ இடத்திலேயே ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் அஜித்தின் கால் உடைந்தது.

    விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த அஜித்துக்கு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு இறந்த ஐஸ்வர்யாவின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் நரிக்குறவர்கள் காலனி அருகே மீஞ்சூர்- காட்டூர் சாலையில் உடலை வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்ததும் பொன்னேரி எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போனில் பேசி சமாதானப்படுத்தினார்.

    உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். விபத்து தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் 3 மாத கர்ப்பிணி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×