என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா போராட்டம்
- முசிறி காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது
- 2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தர்ணா போராட்டம்
முசிறி,
தும்பலம் பெருமாள் பாளையத்தை சேர்ந்தவர் கலையரசி (வயது 23). இவர் அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகரன்( 29 )என்பவரை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். ராஜசேகர் கலையரசிக்கு தெரியாமல் மூன்று மாதத்திற்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தும், புகாரை வாங்கவில்லை என்றும், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் தன்னை அலட்சியப்படுத்தும் இன்ஸ்பெக்டர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, காவல் நிலைய நுழைவாயில் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். காவல் நிலையம் முன்பு பெண் ஒருவர் நடத்திய தர்ணா போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






