என் மலர்
உள்ளூர் செய்திகள்

7 பவுன் நகை திருடி கொண்டு வீட்டை பூட்டி சென்ற கொள்ளையன்
- 7 பவுன் நகை திருடி கொண்டு வீட்டை பூட்டி சென்ற கொள்ளையனால் பரபரப்பு
- சாவியை வீட்டின் சுவிட்ச் பாக்ஸ் மீது வைத்தார்.
திருச்சி
திருச்சி முசிறி அருகே உள்ள காவேரி பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 45) விவசாயி. இவர் வழக்கம் போல் காலையில் வீட்டை பூட்டி அதன் சாவியை வீட்டின் சுவிட்ச் பாக்ஸ் மீது வைத்தார். பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு அங்குள்ள தோட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
மதியம் தோட்ட வேலைகளை முடித்து கொண்டு இருவரும் வீடு திரும்பினர். அப்போது ஸ்விட்ச் பாக்ஸ் மீது வைத்திருந்த சாவியை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் ஸ்விட்ச் பாக்ஸ் மீது சாவி வைப்பதை நோட்டமிட்டு கதவைத் திறந்து நகையை திருடிக் கொண்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மணி வாத்தலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






