பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் கோளாறு - 45 பயணிகள் அவதி

பெங்களூரில் இருந்து திருச்சி வந்த விமானம் 45 பயணிகளுடன் பெங்களூர் நோக்கி மீண்டும் புறப்படுவதற்கு தயாராகியது.விமானத்தின் கதவு மூடப்பட முடியாத காரணத்தினால் தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து அதனை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் கோளாறு - 45 பயணிகள் அவதி
Published on

திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளில் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புது டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருக்கு காலை மற்றும் மாலை வேலைகளில் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர விமான சேவையாக பெங்களூரில் இருந்து இண்டிகோ விமானம் இரவு 10.05 மணிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். நேற்று இரவு பெங்களூரில் இருந்து திருச்சி வந்த விமானம் 45 பயணிகளுடன் பெங்களூர் நோக்கி மீண்டும் புறப்படுவதற்கு தயாராகியது.

அந்த நிலையில் விமானம் புறப்படுவதற்காக பயணிகள் ஏறுவதற்காக பயன்படுத்தப்பட்ட முன்பக்க கதவுகளை மூடுவதற்காக விமானி முற்பட்டபோது விமான கதவுகள் இயங்காத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த கதவானது மூட முடியாத நிலை ஏற்பட்டது.மேலும் இந்த விமானத்தில் உயர் அதிகாரிகள் பயணம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கதவு மூடப்பட முடியாத காரணத்தினால் உடனடியாக இண்டிகோ விமானத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து அதனை சீர் செய்யும் பணியில் விமான நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக போராடி நள்ளிரவு ஒரு மணி அளவில் தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டு கதவு மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு1.10 மணிக்கு பெங்களூர் நோக்கி புறப்பட்டு சென்றது.

இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com