என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்
- தமிழக விவசாய முன்னேற்ற கட்சி வலியுறுத்தப்பட்டது
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு
திருச்சி:
தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சியின் தலைவர் பூ.ரா. விஸ்வநாதன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் புலம்புகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு 12 முதல் 52 சதவீதம் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. இது மக்களை நசுக்கும் செயலாக இருக்கிறது.
தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் 50 சதவீத மக்கள் வசிக்கிறார்கள். 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வீட்டில் 100 யூனிட்டுக்கு மேலே மீட்டர் ஓட வில்லை என்றால் தங்களது மீட்டர் பழுதடைந்துள்ளது என மின் ஊழியர்கள் அதனை கழற்றி சென்று புது மின்மீட்டர் கொண்டு வந்து பொருத்திவிட்டு மின் நுகர்வோர் டெபாசிட்டில் கழித்து விடுகின்றனர். இது போன்ற சுமைகளால் மக்கள் ரோட்டுக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி படி மாதா மாதம் மின் கட்டணத்தை கணக்கீடு செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும். இந்த மின் கட்டண உயர்வினை உடனே வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் 500 யூனிட் வரை மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.






