என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் 5 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன
    X

    நீலகிரியில் 5 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது
    • மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், ஆங்காங்கே சிறிய அளவிலான நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், ஆங்காங்கே சிறிய அளவிலான நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. நேற்றும் நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மஞ்சூர், பந்தலூர் உள்பட அனைத்து பகுதிகளிலுமே காலை முதல் மாலை வரை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது.

    தொடர் மழைக்கு குன்னுாரில் கிளண்டேல், உலிக்கல், ஜிம்கானா பகுதிகளில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் குன்னுார்-மேட்டுப்பா–ளையம் சாலையில் நள்ளிரவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னூர் ஆர்செடின் சாலையில் கிளன்டேல் தேயிலை தொழிற்சாலை அருகே மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். ஊட்டி-கோத்தகிரி சாலை மைனலா பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    இதேபோல் காந்திபுரம், கக்காச்சி மேல் பாரதி நகர், கேத்தி, எடப்பள்ளி, கன்னிமாரியம்மன் கோவில் பகுதிகளில், 11 வீடுகளில் வீட்டின் ஒரு பகுதி மழைக்கு இடிந்து விழுந்தது.இந்த பகுதிகளை கூடுதல் கலெக்டர் பூஷன் குமார் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா, 4,100 ரூபாய் நிவாரண தொகையை வழங்கினார்.

    குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளி அருகில் தடுப்பு சுவர் இடிந்துள்ளது. இேதபோல் கோத்தகிரி மிளிதேன் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. காக்காசோலை கிராமத்தில் பார்வதி என்பவரது வீட்டிற்கு பின்புறம் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. கொடநாடு அண்ணாநகரை சேர்ந்த சரோஜா என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஜக்கனாரை ஆடுபெட்டு பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் மற்றும் காமராஜர் நகர் பகுதியில் வீட்டிற்கு அருகே இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல் மழைக்கு ஊட்டி, குந்தா பகுதிகளில் 5 வீடுகள் சேதமானது.

    ஊட்டி கோடப்பம்மந்து கால்வாயை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கால்வாயில் இருந்து ரெயில் நிலையம் அருகே உள்ள சாலைக்கு கழிவுநீர் வராமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்குமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தர விட்டார்.ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், ஆர்.டி.ஓ. துரைசாமி, தாசில்தார் ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ஊட்டி சுற்று வட்டாரத்தில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது. வார இறுதி நாளான நேற்று, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் கணிசமாக வந்தனர். குளிர் மற்றும் சாரல் மழையில் குடைபிடித்தவாறு பயணியர் சுற்றுலா தலங்களில் வலம் வந்ததை பார்க்க முடிந்தது.

    தொடர் மழையால் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத நிலை காணப்பட்டது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    Next Story
    ×