என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாட்கோ மூலம் ஆதிதிராவிட,  பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி
    X

    தாட்கோ மூலம் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி

    • பாஸ்போர்ட் உரிமை மற்றும் மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
    • இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் டிஜிசிஏ -ஆல் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் உரிமத்தினை பெறுவார்கள்.

    கிருஷ்ணகிரி,

    தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வேளாண்மைத்துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணாவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக தற்போது மெட்ராஸ் இன்ஸ்டியூட் டெக்னாலஜி, சென்டர் பார் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் மூலமாக விவசாயத்துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சியை அளிக்கப்பட உள்ளது.

    வளர்ந்த நாடுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை விவசாய நிலங்களில் தெளித்து நடைமுறைப்படுத்தும் பணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது. விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சி கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் 25 முதல் 30 ஏக்கர் வரை மருந்துகளை தெளித்து முடிக்க முடியும்.

    இதன் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதிக்கலாம். மேலும், விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இந்த பயிற்சியை பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களும், கல்வித் தகுதியில் பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பாஸ்போர்ட் உரிமை மற்றும் மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மற்றும் பயிற்சிக்கான கால அளவு 10 நாட்கள் ஆகும் (இப்பயிற்சியானது கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் பத்து நாட்கள் அளிக்கப்படும்) பயிற்சிக்கான மொத்த தொகை ரூ.61,100- தாட்கோவால் வழங்கப்படும்.

    இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் டிஜிசிஏ -ஆல் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் உரிமத்தினை பெறுவார்கள். மேலும் இந்த உரிமை 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும்.

    இந்த பயிற்சியை பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ ட்ரோன் கருவிகளை வாங்கலாம். மற்றும் உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம்.

    விவசாய ட்ரோன்கள் வாங்குவதற்கு வேளாண்மை துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும், அல்லது தாட்கோவின் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் வங்கி கடன் வழங்க வழி வகை செய்யப்படும்.

    இந்த திட்டத்தில் தகுதி உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×