search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு புகுந்து வங்கி அதிகாரி மனைவியிடம் செயின் பறிப்பு
    X

    வீடு புகுந்து வங்கி அதிகாரி மனைவியிடம் செயின் பறிப்பு

    • பீரோவை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே உள்ள பறையம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுவேதா (வயது 22).

    இவர் தனது மாமனார், மாமியாருடன் பறையம்பட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுவேதா, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு நகைகள் ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தனர்.

    ஆனால் நகைகள் ஏதும் பீரோவில் இல்லை. இதனையடுத்து பக்கத்து அறையில் படுத்திருந்த சுவேதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த சுவேதா கூச்சலிட்டார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    இது குறித்து தச்சம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் பீரோவில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

    மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×