என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
திருவண்ணாமலையில் கர்ப்பிணி சாவில் சந்தேகம்-உறவினர்கள் மறியல்
- வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக புகார்.
- போக்குவரத்து பாதிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சு.ஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தவமணி, ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது 2-வது மகள் புஷ்பா (வயது 26). இவரும், பெரிய கல்தாம்பாடி கிராமத்தை சேர்ந்த டிரைவர் விவேகானந்தன் என்பவரும் காதலித்து உள்ளனர்.
பின்னர் அவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி செய்து கொண்டனர். இந்த நிலையில் புஷ்பா கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் புஷ்பாவை அவரது கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
தாய் வீட்டிற்கு வந்த புஷ்பாவை அவரது பெற்றோர் கடந்த 4-ந் தேதி புஷ்பாவின் கணவர் வீட்டில் விட்டு வந்து உள்ளனர்.
மறுநாள் புஷ்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று ஆறுமுகத்திற்கு அவரது உறவினர்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த பாய்ச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இதற்கிடையில் புஷ்பாவின் கணவர் விவேகானந்தன் மற்றும் அவரது பெற்றோர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் புஷ்பா உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து மதியம் சுமார் 2 மணியளவில் புஷ்பாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென திருவண்ணாமலை அரசு மருத்துவமனை எதிரில் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், புஷ்பாவின் சாவில் சந்தேகம் உள்ளது. அவரை வரதட்சணை கொடுமை செய்து அடித்து கொன்று விட்டனர் என்று கூறினர்.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை புஷ்பாவின் உடலை வாங்க மட்டோம் என்றனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததன் பேரில் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






