என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் நடந்த வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ., ஆகியோர் பேசிய போது எடுத்த படம்.
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
- அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கலசப்பாக்கம்:
கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நேற்று காலை நடந்தது.
முகாமை எம்.பி. அண்ணாதுரை, எம்.எல்.ஏ. சரவணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து அண்ணாதுரை எம்.பி. பேசியதாவது:-
தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்விக்கும் மருத்துவத்திற்கும் தனி முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறார்.
இதன் காரணமாக கல்வியிலும் மருத்துவத்திலும் நாம் முன்னோக்கி செல்கிறோம் மேலும் புத்தாண்டு பிறந்து கலசப்பாக்கம் தொகுதியில் இது முதல் மருத்துவ முகாமாகும் முகாமில் அதிக அளவு பெண்கள் கலந்து கொண்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் கடந்த டிசம்பர் மாதம் நடந்த மத்திய குழு ஆய்வின் போது மேல்வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மத்திய அரசு அனைத்து வசதிகளிலும் முதலிடம் உள்ளதாக தரச் சான்று அளித்துள்ளது.
இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் காரணம் நமது மாவட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து துறைகளின் பணிகளும் சிறந்து விளங்கி வருகிறது.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே நமது மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எந்த ஒரு அடிப்படை வசதிகளாக இருந்தாலும் அதை உடனுக்குடன் மக்கள் முன்வைக்கும் கோரிக்கை யின் அடிப்படையில் மாவட்டத்தின் அமைச்சர் எம்பி ஆகிய நான் எம்.எல்.ஏ. ஆகியோர் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் அதிகாரிகளின் ஒத்து ழைப்போடு பல்வேறு பணிகளை மேற்கொண்டு செல்வதால் நமது திருவண்ணாமலை மாவட்டம் அனைத்திலும் முதலிடம் பிடித்து வருகிறது.
என்பதை நான் பெரும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் அன்பரசி ராஜசேகரன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார் யூனியன் கவுன்சிலர் கலையரசிதுறை வட்டார மருத்துவ அலுவலர் விஜய் பஞ் தலைவர்கள் எழில்மாறன் வித்யா பிரசன்னா பத்மாவதி அறங்காவலர் குழு தலைவர் ராமன் உட்பட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.






