என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆற்றில் மூழ்கி பிளஸ்- 2 மாணவன் பலி
- 30 அடி தொலைவில் கரை ஒதுங்கிய உடல் மீட்பு
- குளித்த போது விபரீதம்
செய்யாறு:
செய்யாறு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு சிவா என்ற மகனும், சில்பா என்ற மகளும் உள்ளனர்.
சிவா செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை நண்பர்களுடன் சிவா செய்யாற்றில் குளிப்பதற்காக சென்றார். ஆற்றில் யானை பள்ளம் என்ற இடத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் ஆழமாக இருந்ததால் சிவா தண்ணீரில் மூழ்கினார்.
நண்பர்கள் முயற்சி செய்தும் சிவா கிடைக்காததால் அவரது அம்மாவிற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் உறவினர்கள் மற்றும் செய்யாறு தீயணைப்பு படை வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். தீயணைப்பு வீரர்கள் இரவு 10 மணி வரை தேடியும் மாணவன் கிடைக்காததால் திரும்பி சென்றனர்.
பின்னர் இன்று காலை யானை பள்ளத்தில் இருந்து சுமார் 30 அடி தொலைவில் சிவாவின் உடல் கரை ஒதுங்கியது.
தகவல் அறிந்த செய்யாறு போலீசார் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த யானை பள்ளத்தில் ஏற்கனவே 3 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.






