

கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க, வேலூர் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் தொடங்கி, கீழ்பள்ளிப்பட்டு நாகநதி ஆற்றுக்கால்வாய் வரை 16 பில்லர்களுடன், 12 மீட்டர் அகலம் கொண்ட மேம்பாலம் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்படும் பணி நடைபெற உள்ளது.
இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ஜெயக்குமார் உதவி பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் அளவீடு செய்தனர்.
சர்வீஸ் ரோடு பெட்ரோல் பங்க் முதல் கீழ்பள்ளிப்பட்டு கால்நடை மருத்துவ நிலையம் வரையிலும், கீழ்பள்ளிப்பட்டு பழைய லெவல் கிராசிங் ரோடு வழியாக 9 மீட்டர் உயரத்தில், 3.5 மீட்டர் அகலத்தில் சப் வே சுரங்கப்பாதை அமைத்து திருவண்ணாமலை ரோட்டில் இணைக்கப்படுகிறது.திட்ட மதிப்பில் நில ஆர்ஜிதம் இழப்பீட்டுத் தொகையும் அடங்கும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த அளவீடு செய்யும் போது கீழ்வல்லம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், மற்றும் கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர். நிலம் மற்றும் கட்டிடங்கள் வழங்கிய உரிமையாளர்கள் தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்காமல் பணிகள் தொடங்கியது மிகவும் வருந்தத்தக்கது என தெரிவித்தனர்.