சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள்பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் - ஆனைமலை புலிகள் காப்பகம் அறிவிப்பு

சுற்றிப்பார்க்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.பண்டிகை விடுமுறையை கொண்டாடுவதற்கு சுற்றுலா பயணிகள் வனத்துறை தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

உடுமலை:

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு டாப்சிலிப்பில் யானைகள் முகாம், குரங்கு நீர்வீழ்ச்சி, சிறு குன்றா, அட்டகட்டி காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை சுற்றிப்பார்க்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. இதற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விடுதிக்கு தகுந்தவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்படுவதால் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

பண்டிகை விடுமுறையை கொண்டாடுவதற்கு சுற்றுலா பயணிகள் வனத்துறை தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு அனைத்து தங்கும் விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் டாப்சிலிப், சேத்துமடை, அட்டக்கட்டி, சிறுகுன்றா ஆகிய பகுதிகளில் வனத்துறை தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் 39 தங்கும் விடுதிகள் தற்போது சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு பயன்பாட்டில் உள்ளன. இந்த அனைத்து அறைகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு முன்பதிவு முடிந்து விட்டது. மானாம்பள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

பணிகள் முடிந்ததும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க சோதனை சாவடிகளில் வாகன சோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com