காங்கயத்தில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார்

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் வழங்கிய காட்சி
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் வழங்கிய காட்சி
Published on

காங்கயம் : 

காங்கேயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து இம்மருத்துவ முகாமில் 3 நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை , 6 பள்ளி மாணவிகளுக்கு தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடிகள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 5குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்கள், 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 13 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தினை அமைச்சர் வழங்கினார்.முன்னதாக இந்த மருத்துவ முகாமில் இலவச சிறப்பு வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சியின் திட்ட இயக்குநர் லட்சுமணன், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) கனகராணி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஸ்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், வட்டார மருத்துவ அலுவலர் முரளி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com