search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிறையில் அடைப்பு
    X

    சிறையில் அடைக்கப்பட்ட உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி.

    லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிறையில் அடைப்பு

    • கட்டிடத்தின் மதிப்பீடு அறிக்கை அளிக்க பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டது.
    • திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அய்யன் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42). இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதத்துக்கு முன்பு ரூ.74 லட்சம் மதிப்புள்ள சொத்தை திருப்பூரில் பத்திரப்பதிவு செய்தபோது, சொத்தில் உள்ள கட்டிடத்தின் மதிப்பீடு அறிக்கை அளிக்க மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உள்பட 27 மாவட்டங்களுக்கான மதிப்பீடு அலுவலகம் அங்கு அமைந்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டிடம்) ராமமூர்த்தி, திருப்பூரில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை கள ஆய்வு செய்து, அதற்கான மதிப்பீடு அறிக்கையை அளிக்க ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கோபாலகிருஷ்ணனிடம் ரூ.75 ஆயிரம் கேட்டுள்ளார்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரையின்படி, ரூ.75 ஆயிரம் லஞ்ச பணத்தை கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்து அனுப்பினர். உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி கூறியதின் பேரில், அவரது உதவியாளராக தனிநபர் குமார் (45) என்பவர் திருப்பூரை அடுத்த மங்கலத்துக்கு வந்திருந்தார். அவரிடம் கோபாலகிருஷ்ணன் ரூ.75 ஆயிரத்தை கொடுத்தபோது திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் காரில் இருந்து கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 48 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவத்தில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதுரையில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ராமமூர்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரின் வீடு, அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. இதனையடுத்து அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×