search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புற்றுநோய் சிகிச்சை கட்டிடத்திற்கு நிதி திரட்ட  மராத்தான்
    X

    கோப்புபடம்.

    புற்றுநோய் சிகிச்சை கட்டிடத்திற்கு நிதி திரட்ட மராத்தான்

    • ரோட்டரி சங்கங்கள் குறைந்தபட்சம் 100 நபர்களை நிகழ்ச்சியில் பங்கு பெற வைப்பதாக உறுதியளித்துள்ளனர்.
    • அனைவரும் பங்கேற்று இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக மாற்றுங்கள் என்றார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் அமையவுள்ள இலவச புற்றுநோய் சிகிச்சை கட்டடத்துக்கு நிதி திரட்டி உதவும் வகையில் வருகிற ஜனவரி 8-ந் தேதி திருப்பூர் வாக்கத்தான் மற்றும் மாரத்தான் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க பல நிறுவனங்கள் அவர்களுக்கான நுழைவு கட்டணத்தை செலுத்த ஆர்வமாக முன்வந்துள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

    திருப்பூரில் உள்ள அனைத்து சங்கங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். திருப்பூர் அனைத்து ரோட்டரி சங்கங்கள், தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலை, காங்கயம், மேட்டுப்பாளையம், வெள்ளகோவில், காரமடை, சோமனூர், அன்னூர் உள்ளிட்ட அனைத்து ரோட்டரி சங்கங்களும் மாபெரும் வாக்கத்தான், மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன.

    ரோட்டரி சங்கங்கள் ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 100 நபர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற வைப்பதாக உறுதியளித்துள்ளனர். 3 நாட்களில் 3,000க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர். 15 ஆயிரம் பேரை நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:- சமூக நலன் காக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியினை மக்கள் மத்தியில் முழுதாக கொண்டு சேர்க்கும் பணியினை தீவிரப்படுத்தி உள்ளோம். ஏழை, எளிய புற்றுநோயாளிகள் சிகிச்சைக்கு கட்டப்படும் இலவச புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு நிதி திரட்டும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தன்னார்வத்தோடு பங்கேற்று நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய வேண்டும்.

    பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். 500, ஆயிரம் ரூபாய் என்பது சாதாரணம் இல்லை. அது முகம் அறியாத ஏழை, எளிய மக்களுக்கு செய்யும் மகத்தான சேவை என்பதை மனதில் கொள்ளுங்கள். அனைவரும் பங்கேற்று இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக மாற்றுங்கள் என்றார்.

    Next Story
    ×