என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பங்குச்சந்தை முதலீட்டில் ரூ.13 லட்சத்தை இழந்ததால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை
- பங்குச்சந்தையில் முதலீடு செய்ததில் அவருக்கு ரூ.10 லட்சம் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- வீட்டின் மாடியில் பார்த்தசாரதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 46). இவருக்கு திருமணம் ஆகி மகள்கள் உள்ளனர். இவர் கொங்கு மெயின் ரோட்டில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார்.
பார்த்தசாரதி பங்கு சந்தை முதலீடு செய்து வந்துள்ளார். வங்கியில் கடன் பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்ததில் அவருக்கு ரூ.10 லட்சம் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வங்கி கடனை குடும்பத்தினர் அடைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மேலும் ரூ.3 லட்சத்தை வங்கியில் கடன் பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்து பார்த்தசாரதி நஷ்டம் அடைந்ததாக தெரிகிறது.
இதில் வங்கிக்கு பணம் கட்டாததால் வங்கி ஊழியர்கள் அவரது வீட்டில் வந்து விசாரித்துள்ளனர். இதனால் மன உடைந்த நிலையில் அவர் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் மாடியில் பார்த்தசாரதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






