search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்சு வர்த்தகத்தை கண்காணிக்க குழு - சைமா வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    பஞ்சு வர்த்தகத்தை கண்காணிக்க குழு - சைமா வலியுறுத்தல்

    • ஜவுளித்தொழில் 50 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது.
    • லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்–பூர் :

    நூற்பாலைகளுக்கு விவசாயிகள் நேரடியாக பஞ்சை விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரிக்கு சைமா சங்க தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், மத்திய ஜவுளித்துறை மந்திரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று பாதிப்பு, அபரிமிதமான நூல் விலை உயர்வால் திருப்பூர் பகுதியில் பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி, விசைததறி, கைத்தறி ஜவுளித்தொழில் 50 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் நடப்பு ஆண்டுக்கான பருத்தி சீசன் தொடங்கும்போது, மத்திய அரசு கவனமாக செயல்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் ஜவுளித்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு விடும்.

    தேவைக்கு மேல் கொள்முதல் செய்து செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்கும் பெரும் வியாபாரிகள், ஒழுங்குமுறை விற்பனை கொள்கை அறிவிக்கப்பட்டிருந்தும், முழுமையாக செயல்படுத்தாமல் இருக்கும் இந்திய பருத்தி கழக நிறுவனம் ஆகியவற்றால் நூல் விலை உயர்வு, பற்றாக்குறைக்கு காரணம் ஆகும். இதற்கான தீர்வுகளையும் எங்கள் சங்கம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.

    விவசாயிகளுக்கு நியாயமான ஆதரவு விலையை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் விவசாயிகள் நேரடியாக பஞ்சு அரைப்பவர்களுக்கும், நூற்பாலைகளுக்கும் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு நியாயமான விலையை கொடுக்க வியாபாரிகள் மறுக்கும்போது அல்லது கொள்முதல் செய்ய வராதபோது இந்திய பருத்தி கழகம் தலையிட்டு அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். அப்படி கொள்முதல் செய்த பருத்தியை அதிகமாக வாங்கி இருப்பு வைக்கும் வியாபாரிகளை தவிர்த்து உற்பத்தி செய்யக்கூடிய நூற்பாலைகளுக்கு விற்க வேண்டும்.

    பருத்தி, பஞ்சு இருப்பு திருப்தியாக இருக்கும்போது கூட உள்நாட்டு உற்பத்திக்கு போதுமான அளவு வினியோகம் செய்து மீதம் உள்ள இருப்பை ஏற்றுமதி வர்த்தகத்துக்கு அனுமதிக்க வேண்டும். அரசு ஏற்கனவே அறிவித்தபடி பருத்தி, பஞ்சு விசயத்தில் நிபுணத்துவம் உள்ள குழுவை அமைத்து, பருத்தி அதிகம் விளைவித்தல், வியாபாரிகள், இந்திய பருத்தி கழகம் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசின் கொள்கைக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 3 மாதத்துக்கு ஒருமுறை அந்த குழு கூடி தேவையான பரிந்துரைகளை தர வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×