தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி - பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து தெருநாய்கள் ஆடுகளை கடித்து கொன்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டம் அல்லது சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வெள்ளகோவில் : 

வெள்ளகோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து தெருநாய்கள் ஆடுகளை கடித்து கொன்று வருகின்றன. இதனால் ஆடு வளர்ப்போர் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாறு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (35) என்பவர் தான் வளர்த்து வரும் வெள்ளாடுகளை காட்டில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். நேற்று பகலில் திடீரென அங்கு வந்த சில தெரு நாய்கள் 7 ஆடுகளை கடித்து கொன்றன. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும். இதே போல் முத்துக்குமார் நகர் என்ற இடத்தில் 5 ஆடுகளை நாய்கள் கடித்து படுகாயம் அடைந்தன. அந்த ஆடுகள் உரிமையாளர்களால் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இதுவரை வெள்ளகோவில், கல்லாங்காட்டுவலசு, அய்யனூர், திருமங்கலம், கச்சேரி வலசு, நாச்சிபாளையம், காடையூரான் வலசு உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் நாய்கள் கடித்து இறந்துள்ளன. பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் விட வேண்டும், இறந்து போன ஆடுகளுக்கு உண்டான உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் அல்லது சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com