search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகம் சிதைந்த நிலையில் வாலிபர் மர்ம சாவு
    X

    முகம் சிதைந்த நிலையில் வாலிபர் மர்ம சாவு

    • அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாள தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றின் கரையில் உள்ள குட்டையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வாணியம்பாடி தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு சென்று, தீயணைப்பு துறையினர் உதவியுடன் தண்ணீரில் மிதந்த ஆண் உடலை மீட்டு கொண்டு வந்தனர்.

    வாலிபரின் முகம் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்து இருந்தது. போலீசார் உடலை கைப்பற்றி அதனை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்த வாலிபர் யார் என்பது தெரியவில்லை. அவரை கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை சிதைத்து வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    வாலிபர் எந்த ஊரைச் சேர்ந்தவர், எவ்வாறு இறந்தார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி நகரத்தை ஒட்டியுள்ள உதயேந்திரம், மேட்டுப்பாளையம், சி.வி.பட்டறை மற்றும் அம்பலூர், திம்மாம்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

    மணல் கொள்ளை நடத்தும் மாபியா கும்பலில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவாய்த்துறையினரை தாக்கியும், மணல் கடத்தல் தொடர்பாக தகவல் அளிப்பவர்கள் தாக்கப்பட்டு வருவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் களும் அளிக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் மணல் கொள்ளையர்கள் பல்வேறு கோஷ்டிகளாக உள்ளதால், அவர்களுக்கிடையே ஏற்படும் தகராறு தொடர்பாக போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டு அதன் மீது விசாரணை நடத்தும் போலீசார் வேறு வழக்குகளை பதிவு செய்து முடித்து வருகின்றனர்.

    வாணியம்பாடி பகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருவதால், இது இருதரப்புகளுக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×