என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி கார் டிரைவர் பலி
- பசு மாட்டை தேடி சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
பேரணாம்பட்டு அடுத்த நரியனேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). கார் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி உஷா என்ற மனைவியும், 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது பசு மாட்டை வீட்டின் அருகே கட்டியிருந்தார். அந்த மாடு திடீரென காணாமல் போனது. இரவு முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை சரவணன் தனது மனைவியிடம் அருகில் உள்ள பகுதிக்கு சென்று மாட்டை தேடச்செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
வடபுதுப்பட்டு பகுதியில் கால்நடைகள் அதிகமாக வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பசுமாடு அங்கு சென்றிருக்கும் என கருதிய சரவணன் அந்தப்பகுதிக்கு செல்ல ஆம்பூர்- பச்சகுப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது சென்னை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






