என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
- திருவிழாவின் முக்கிய நிழ்ச்சியான 11-ம் திருநாள் தேரோட்டம் நேற்று நடந்தது.
- இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கடற்கரை யோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 191-வது வைகுண்டர் ஆண்டு ஆடிதிருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் வெகு விமரிசையாக நடந்தது.
தேரோட்டம்
திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என வெவ்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
திருவிழாவின் முக்கிய நிழ்ச்சியான 11-ம் திருநாள் தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடந்தது. பகல் 12.30 மணிக்கு உச்சிப்படிப்பு பணிவிடை நடந்தது. மதியம் 1.15 மணிக்கு அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் தொடங்கி யது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அய்யா வைகுண்டர், அவதாரபதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது. இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகரன், செயலாளர் பொன்னுத்துரை, துணைத் தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணைச் செயலாளர்கள் ராதா கிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், செல்வின், வரதராஜ பெருமாள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சுதேசன், சீனிவாசன், முத்துக்குட்டி, டி. பாலகிருஷ்ணன், கோவை ஹரிராமன், சிவாஜி, வினோத், கண்ணன், கேடிஎம். செல்வகுமார், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் ரவிகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.








