search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகாளய அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
    X

    அய்யங்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த போது எடுத்த படம்.

    மகாளய அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

    • ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்
    • திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் வழிபாடு

    வேங்கிக்கால்:

    மகாளய அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட மகாளய அமாவாசை திதி கொடுப்பதற்கு ஏற்றதாகும். மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை நினைவு கூற வேண்டும். மேலும் புனித நீர் நிலைகளுக்கு சென்று நீராடி நம் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    அமாவாசை நாட்களில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று அவர்களை ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. இந்த நாட்களில் சிரத்தையோடு முன்னோர்களை வழிபட்டால் தீர்க்க ஆயுளுடன் புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவை நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

    சாதாரண அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது 3தலைமுறை முன்னோர்களை சென்று சேரும். மகாளய அமாவாசை தினத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணம் தாய்வழி, தந்தைவழி முன்னோர்களுக்கு மட்டுமின்றி, நமது ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கும் தர்ப்பணம் கொடுப்பதற்கு சமமாகும்.

    இத்தனை சிறப்பு வாய்ந்த மகாளய அமாவாசை தினமான இன்று காலை ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளம், கிரிவலப்பாதையில் உள்ள புனித தீர்த்த குளம் உள்ளிட்ட இடங்களில் கூடிய பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    Next Story
    ×