

நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை சரகத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் ஏற்கனவே விசாரணை நடத்திய அறிக்கையை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பொன்ரகு, சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. நவராஜ், இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார்.
தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்த அதே பிரிவின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே புகார் கூறிய கே.டி.சி. நகரை சேர்ந்த சுபாஷ், அவரது மனைவி சங்கீதா, அவர்களது வக்கீல் உள்பட 5 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். இதைத்தொடர்ந்து அவர்கள் பாளையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.