என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசிடம் சிக்காமல் இருக்க பாலத்தில் இருந்து குதித்த வாலிபர்- படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
- வாலிபர் போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்தில் இருந்து கீழே குதித்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அங்காளஈஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள பாலத்தின் சுவரில் 3 வாலிபர்கள் அமர்ந்திருந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதை தொடர்ந்து அவர்களிடம் சோதனையிட்ட போது ஒரு வாலிபரிடம் 10 கிராம் கஞ்சா இருந்தது.
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர். அப் போது கஞ்சா வைத்திருந்த வாலிபர் போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். போலீசார் அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலத்தில் இருந்து குதித்த வாலிபர் பட்டம் புதூரை சேர்ந்த சூரியராஜா (வயது 22), ஜே.சி.பி. டிரைவர் என்பதும், உடன் இருந்தவர்கள் அவரது உறவினர்களான முத்துராஜா, நாகராஜா என்பதும் தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






