search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா- 10 ஆயிரத்து 840 பேருக்கு பட்டங்கள் வழங்கிய கவர்னர்
    X

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்திக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார்.

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா- 10 ஆயிரத்து 840 பேருக்கு பட்டங்கள் வழங்கிய கவர்னர்

    • தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 9ஆயிரத்து 670 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.
    • கவர்னர் உறுதிமொழி கூற பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆராய்ச்சி படிப்பு, முதுகலை, இளநிலை, தொலைநிலைக்கல்வி ஆகிய பிரிவுகளில் கடந்த 2019-20, 2020-21, 2021-22, 2022-23 ஆகிய 4 ஆண்டுகளில் படித்தவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வரவேற்று பேசினார்.

    தமிழ்நாடு கவர்னரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, பி.எச்டி படிப்பு முடித்த 302 பேருக்கும், 490 எம்.பில், 119 முதுகலை மாணவர்கள், இளங்கலை மாணவர்கள், 257 பி.எட் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 9ஆயிரத்து 670 பேருக்கு பட்டங்கள் வழங்கினார். மொத்தம் 10 ஆயிரத்து 840 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.

    அப்போது கவர்னர் உறுதிமொழி கூற பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் அளிக்கப்பட்ட பட்டங்களுக்கு கவர்னர் அதிகாரம் அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்லைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதாசேஷய்யன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    பட்டமளிப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

    Next Story
    ×