என் மலர்
உள்ளூர் செய்திகள்

மானாமதுரை அருகே தலை துண்டித்து வாலிபர் படுகொலை: பதட்டம்-போலீஸ் குவிப்பு
- ராமு கொலையை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
- செங்கோட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராமு (வயது27). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ராமு, இரவு ஆகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அங்குள்ள இம்மனேந்தல் கண்மாய் கரையில் வாலிபர் ஒருவரின் உடல் தலை இல்லாமல் கிடந்ததை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அவரை யாரோ மர்மநபர்கள் தலை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தவர் மாயமாகி தேடப்பட்டு வந்த ராமு என்பது தெரியவந்தது. ராமுவின் உடல் மட்டுமே அங்கு கிடந்தது. அவரது தலை சம்பவ இடத்தில் இல்லை.
ராமு கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
கொலை செய்யப்பட்டது வாலிபர் ராமு என்பதை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து அவரது உடலை போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ராமுவை தலை துண்டித்து கொலை செய்தது யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராமுவின் தலை போலீசாருக்கு கிடைக்கவில்லை. அவரை கொன்ற கொலையாளிகளை தலையை துண்டித்து எடுத்து சென்றுள்ளனர்.
ராமு பிணம் மீட்கப்பட்ட கண்மாய் மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் போலீசார் தலையை தேடி வருகின்றனர்.
ராமு கொலையை தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் செங்கோட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று நேரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் இன்று காலை கொலை நடந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விசாரணையை துரிதப்படுத்தி கொலையாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.






