search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அலங்காநல்லூர் அருகே வேட்டைக்கு சென்ற வாலிபர் மின்வேலியில் சிக்கி பலி
    X

    அலங்காநல்லூர் அருகே வேட்டைக்கு சென்ற வாலிபர் மின்வேலியில் சிக்கி பலி

    • வேட்டைக்கு சென்ற வாலிபர், வேட்டை நாய்களுடன் மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தோட்டத்து உரிமையாளரான அசோக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் வேட்டை நாய்களும் வளர்த்து வந்தார். அதனை வைத்து காட்டு பகுதிக்கு சென்று வேட்டையாடுவதிலும் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மாணிக்கம் தன்னுடைய 5 வேட்டை நாய்களை அழைத்து கொண்டு அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யன கவுண்டன்பட்டி கிராமத்தில் இருக்கும் காட்டு பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றுள்ளார்.

    அந்த இடத்தில் அய்யன கவுண்டன்பட்டியை சேர்ந்தவர்களின் தோட்டங்கள் இருக்கிறது. அசோக்குமார் என்பவர் தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் சம்பங்கி பூக்கள் பயிரிட்டிருந்தார். அதனுள் வன விலங்குகள் எதுவும் புகுந்துவிடக்கூடாது என்பதற்காக சம்பங்கி பூக்கள் பயிரிடப்பட்டிருந்த இடத்தை சுற்றி மட்டும் மின்வேலி அமைத்திருக்கிறார்.

    சாதாரணமாக பார்த்தால் உடனடியாக தெரியாத வகையில் மின்வேலி மிகவும் மெல்லிய கம்பியை பயன்படுத்தி சிறிதாக அமைக்கப்பட்டிருந்தது. இதனை அறியாத மாணிக்கம், அசோக்குமாரின் தோட்டத்து வழியாக நள்ளிரவில் சென்றிருக்கிறார்.

    அப்போது அவரது கால் மின்வேலியில் பட்டுவிட்டது. இதனால் மாணிக்கம் மீதும், அவர் அழைத்து சென்ற வேட்டை நாய்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் மாணிக்கம் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். அவரது வேட்டை நாய்களும் மின்சாரம் பாய்ந்து பலியாகின.

    மாணிக்கம் மற்றும் அவரது வேட்டை நாய்கள் இறந்து கிடப்பதை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து தோட்டத்து உரிமையாளரான அசோக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×