search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி பேராசிரியர்
    X

    விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி பேராசிரியர்

    • விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, கல்லூரிப் பேராசிரியர் திடீரென அருகில் இருந்த சென்னை இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
    • இதை அந்த பெண் கண்டித்து அவரை எச்சரித்தார். மேலும் இதுபற்றி விமான பணிப்பெண்களிடம் புகாா் செய்தாா்.

    ஆலந்தூர்:

    சவுதிஅரேபியா, ஜெட்டாவில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த 35 வயது இளம்பெண் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் உட்பட 239 பயணிகள் பயணம் செய்தனர்.

    விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, கல்லூரிப் பேராசிரியர் திடீரென அருகில் இருந்த சென்னை இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அந்த பெண் கண்டித்து அவரை எச்சரித்தார். மேலும் இதுபற்றி விமான பணிப்பெண்களிடம் புகாா் செய்தாா்.

    இதையடுத்து இதுகுறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமானம் சென்னையில் தரையிறங்கியதும் விமான ஊழியர்கள், சில்மிஷத்தில் ஈடுபட்ட பேராசிரியரை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.

    இதுகுறித்து கல்லூரி பேராசிரியர் போலீசாரிடம் கூறும்போது, தூக்கக்கலக்கத்தில் தெரியாமல் கைபட்டு விட்டது. மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து இளம்பெண் புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டாா். போலீசாா் இருவரையும், சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

    இதற்கிடையே அந்த இளம் பெண், விமானத்தில் நடந்த சம்பவம் பற்றி, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தாா். இதனால் பெண்கள் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் கடுமையாக இதை விமா்சனம் செய்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண் மீண்டும் சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×