search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூரில் பைனான்சியர் வீட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை
    X

    வேடசந்தூரில் பைனான்சியர் வீட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை

    • மாடியில் குடியிருந்த நர்சு வீட்டிற்குள்ளும் கொள்ளையடிக்க முயன்றனர்.
    • வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 75). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு சொந்தமான வீடு இதே பகுதியில் உள்ளது. வீட்டின் மாடியில் நர்சு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுவிட்டு கீழ் தளத்தில் வசித்து வந்தனர்.

    மேலும் வேலுச்சாமி குடும்பத்துடன் ஆந்திராவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இதனால் வீட்டை பூட்டிவிட்டு அங்கேயே தங்கியிருந்தனர். எப்போதாவது விடுமுறைக்கு மட்டுமே இங்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். மேலும் பீரோவையும் உடைத்து அதிலிருந்த தங்கம், வெள்ளி நகைகளையும், ரொக்க பணத்தையும் அள்ளிச் சென்றனர்.

    இதனையடுத்து மாடியில் குடியிருந்த நர்சு வீட்டிற்குள்ளும் கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை. பின்னர் அருகில் இருந்த மற்றொரு வீட்டின் வாசலில் கட்டியிருந்த 2 சேவல்களையும் திருடிக்கொண்டு அக்கும்பல் தப்பியோடினர்.

    காலையில் வேலுச்சாமியின் வீடு திறந்து கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் கொள்ளை நடந்த விவரம் தெரியவந்தது. இதுகுறித்து வேலுச்சாமியிடம் கேட்ட போது பீரோவில் 3 பவுன் தங்கநகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் வைத்திருந்ததாக தெரிவித்தார்.அந்த நகை, பணம் திருடு போனது.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×