search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரிய ஜன்னல்கள், நவீன இருக்கை வசதியுடன் இயங்கும் மலைரெயில்- சுற்றுலா பயணிகள் வரவேற்பு
    X

    பெரிய ஜன்னல்கள், நவீன இருக்கை வசதியுடன் இயங்கும் மலைரெயில்- சுற்றுலா பயணிகள் வரவேற்பு

    • யுனெஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவடைந்து, 19-வது ஆண்டில் நீலகிரி மலை ரெயில் அடிவைத்துள்ளது.
    • பெரம்பூர் இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில், அதநவீன வசதிகளுடன் பெட்டி உருவாக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த மலைரெயிலானது, பல்வேறு மலைகள் மற்றும் குகைகளை தாண்டியும், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான பள்ளத்தாக்குகளை கடந்து செல்கிறது.

    அடர்வனத்திற்கு நடுவே செல்வதால் பல இயற்கை காட்சிகள், வனவிலங்குகளை பார்க்கலாம் என்பதால் இந்த ரெயிலில் ஒருமுறையாவது பயணிக்க வேண்டும் என்பதே நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணமாக இருக்கும்.

    இப்படிப்பட்ட இந்த மலைரெயிலுக்கு கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கப்பட்டது.

    யுனெஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவடைந்து, 19-வது ஆண்டில் நீலகிரி மலை ரெயில் அடிவைத்துள்ளது.

    இதனை கொண்டாடும் விதமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயிலில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக பெரம்பூர் இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில், அதநவீன வசதிகளுடன் பெட்டி உருவாக்கப்பட்டது. இந்த பெட்டி சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு சிறப்பு மலைரெயிலுடன் இணைக்கப்பட்டது.

    இந்த அதநவீன வசதிகளுடன் கூடிய மலைரெயில் இயக்கம் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற தினத்தில் தனது பயணத்தை தொடங்கியது.

    முன்பு இயங்கிய மலை ரெயிலில் மற்ற ரெயில்களை போல் ஜன்னல் இருக்கும். அதனை திறந்து நாம் இயற்கை காட்சிகளை பார்க்க வேண்டிய சூழல் இருந்தது.

    மேலும் கால்களை மடக்கியபடியே நீண்ட தூரம் பயணிக்கும் நிலையும் காணப்பட்டது.

    ஆனால் தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள பெட்டியில் மலைரெயில் அடர்ந்த காடுகளுக்கு நடுவே பயணிக்கும் போது, வனத்தின் இயற்கை காட்சிகளையும், அங்கு நிற்கும் வன விலங்குகள், சீதோஷ்ண நிலை, அங்குள்ள அருவிகள் நீர்வீழ்ச்சிகளை ஜன்னலை திறக்காமல், நாம் இருந்த இடத்தில் இருந்தே கண்டுகளிக்கும் விதமாக அலுமினியத்தால் ஆன கண்ணாடிகளால் பரந்து விரிந்த கதவுகளுடன் கூடிய மிகப்பெரிய ஜன்னல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக நாம் இயற்கை அழகுகளை கண்டு ரசிக்கலாம்.

    இதுதவிர பயணிகள் கால் நீட்டி அமருவதற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட இருக்கை வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. குஷன் வகையிலான இருக்கைகள் போடப்பட்டு பயணிகள் நன்றாக தங்கள் கால்களை நீட்டி கொண்டே பயணம் செய்யலாம்.

    சாதாரணமாக ரெயில் சென்று கொண்டிருக்கும் போது குலுங்குவது நமக்கு தெரியும். ஆனால் இந்த பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள ரோலர் தாங்கு உருளைகளால் நமக்கு ரெயில் குலுங்குவது உள்பட எந்தவித அசைவுகளும் தெரியாமல் செல்லும்.

    மேலும் பெட்டி முழுவதும் எல்.இ.டி. விளக்குகள், செல்போன் சார்ஜ் போடுவதற்கான வசதிகளும் இந்த பெட்டியில் உள்ளது.

    ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு மலைரெயிலில் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய பெட்டிகள் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பயணிக்கவே சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்புகின்றனர்.

    Next Story
    ×