search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. மாநில பட்டியல் அணி தலைவர் வீட்டில் சரமாரி கல் வீச்சு- கார் உடைப்பு
    X

    பா.ஜ.க. மாநில பட்டியல் அணி தலைவர் வீட்டில் சரமாரி கல் வீச்சு- கார் உடைப்பு

    • கல் வீச்சில் தடா பெரியசாமியின் பேரன் அதிரந்தன் என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது அகரம்சீகூர் அருகேயுள்ள திருமாந்துறை கிராமம். இங்குள்ள நோவா நகரில் தனது மகன் பிரபாகரனுடன் ஒரே குடும்பமாக வசித்து வருபவர் தடா பெரியசாமி (வயது 61).

    இவர் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்து வருகிறார். இதற்கு முன்னதாக தடா பெரியசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார். பின்னர் அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். மேலும் ஒரு அறக்கட்டளை நிர்வாகியாகவும் உள்ளார்.

    இதற்கிடையே சமீபத்தில் திருவாரூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து அவதூறான சில தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருமாவளவனும் தடா பெரியசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி நிர்வாகி ஒருவர் வெளியிட்டு இருந்த வீடியோவில், திருமாவளவன் குறித்து பேச தடா பெரியசாமிக்கு எந்தவித தகுதியும் கிடையாது. அதையும் மீறி அவர் பேசிய அவதூறு பேச்சுக்கு தகுந்த தண்டணையை விரைவில் அனுபவிப்பார் என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை வெளியில் சென்ற தடா பெரியசாமி பெரம்பலூரில் பல்வேறு கட்சி பணிகளை மேற்கொண்டார். பின்னர் இரவில் வீடு திரும்பிய அவர் வீட்டின் முன்பு தனக்கு சொந்தமான இன்னோவா காரை நிறுத்தியிருந்தார். அருகிலேயே இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.

    இரவு சுமார் 11 மணியளவில் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனங்களில் பெயர், விபரம் தெரியாத 7 பேர் வந்துள்ளனர். கடுமையான பனிப்பொழிவு காரணமாகவும், கிராமம் என்பதாலும் யாரும் அதனை முதலில் அறிந்திருக்கவில்லை.

    பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர் தடா பெரிசாமியின் கார் மீது பாறாங்கற்களை வீசினர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கட்டைகளால் காரை சரமாரியாக அடித்து உடைத்தனர். அத்துடன் காரின் டயர்களை கத்தியால் குத்தி கிழித்தனர். இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது.

    சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வர கதவை திறந்தனர். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவர்களை வெளியே வரவிடாமல் தடுக்கும் வகையில், வீட்டின் மீதும் சரமாரியாக கருங்கற்களை வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இந்த கல் வீச்சில் தடா பெரியசாமியின் பேரன் அதிரந்தன் (4) என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அடுத்த ஒருசில நிமிடங்களில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தடா பெரியசாமி மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் தனது காரையும், வீட்டையும் சேதப்படுத்தி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×