search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பஸ் மோதி 1 வயது குழந்தை பலி- கல்வீசி பஸ் கண்ணாடியை உடைத்த 4 பேர் கைது
    X

    தனியார் பஸ் மோதி 1 வயது குழந்தை பலி- கல்வீசி பஸ் கண்ணாடியை உடைத்த 4 பேர் கைது

    • அதிகாரிப்பட்டி கிராம மக்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர்.
    • விபத்தில் குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் வாயக்கால் பட்டறை வீராணம் பிரதான சாலையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (50), நகை கடையில் பணி புரிகிறார். இவரது மகள்கள் பிரியதர்ஷினி,வினிதா, பிரியதர்ஷிணியின் ஒரு வயது குழந்தை நிதின், நேற்று ஜெகதீஷ், வினிதா, நிதின் ஆகிய 3 பேரும் கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினர்.

    மோட்டார் சைக்கிள் உடையாப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து குழந்தை தவறி விழுந்த நிலையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதால் தாத்தா கண் முன்னே அந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தது. மற்ற 2 பேரும் லேசான காயத்துடன் தப்பினர்.

    இதற்கிடையே அங்கு திரண்ட அதிகாரிப்பட்டி கிராம மக்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர். மேலும் பஸ்சில் இருந்து இறங்கிய டிரைவரையும் பொது மக்கள் துரத்தி தாக்கினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே பஸ் கண்ணாடியை உடைத்ததாக அதிகாரிப்பட்டியை சேர்ந்த தனீஷ்குமார் (23), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் (32), சிவசங்கர்( 20), பேளூரை சேர்ந்த விஷ்ணு (22) மற்றும் தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தலைவாசல் நாவலூரை சேர்ந்த ரமேஷ்குமார் (42)ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    Next Story
    ×