search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூந்தமல்லி அருகே லாரி மீது மோதியதில் கார் தீப்பிடித்தது- பெண் என்ஜினீயர் உயிர் தப்பினார்
    X

    பூந்தமல்லி அருகே லாரி மீது மோதியதில் கார் தீப்பிடித்தது- பெண் என்ஜினீயர் உயிர் தப்பினார்

    • கார் திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தின் மீது வேகமாக மோதியது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    சென்னை, முகப்பேரை சேர்ந்தவர் கிருத்திகா(23). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று நண்பர்களுடன் ஒரு நாள் சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நண்பர்களை அழைத்துச் செல்ல அதிகாலை கிருத்திகா தனது காரில் வந்து கொண்டு இருந்தார். பூந்தமல்லி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தின் மீது வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதேபோல் லாரியின் பின்பக்கமும் தீப்பற்றி எரிந்தது. இதனால் காரை ஓட்டி வந்த கிருத்திகா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். இதனை கண்ட கண்டெய்னர் லாரி டிரைவர் வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே வந்த மற்ற வாகன ஓட்டிகள் காரின் கதவை திறந்து கிருத்திகாவை பத்திரமாக மீட்டனர். தகவல் அறிந்ததும் பூல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கார் தீப்பிடித்ததும் கிருத்திகா உடனடியாக மீட்கப்பட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×