search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் பாய்ச்சி கணவரை கொன்றாரா?- பெண்ணை பிடித்து போலீஸ் விசாரணை
    X

    மின்சாரம் பாய்ச்சி கணவரை கொன்றாரா?- பெண்ணை பிடித்து போலீஸ் விசாரணை

    • ராஜாமணிக்கும், அவரது வீட்டில் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டம் வலையம்பாடியை சேர்ந்த குமார் என்ற வாலிபருக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது.
    • இதையடுத்து போலீசார் நாகராஜின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திலகர் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜாமணி(44). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இதையடுத்து கணவன், மனைவி மட்டும் இங்கு வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ராஜாமணி சத்தம் போட்டு கொண்டே வெளியில் ஓடி வந்தார்.

    அவரிடம் அக்கம்பக்கத்தினர் விசாரித்தனர். அப்போது, எனது கணவர் வீட்டிற்கு அதிக குடிபோதையில் வந்ததாகவும், போதை தலைக்கேறிய நிலையில் சுவரில் மோதி இறந்து விட்டதாகவும் கூறினார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர் விரைந்து அங்கு ஓடினர். அப்போது நாகராஜ் பிணமாக கிடந்தார்.

    உடனடியாக பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் நாகராஜின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரது உடல் கருகிய நிலையில் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இருப்பினும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜாமணிக்கும், அவரது வீட்டில் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டம் வலையம்பாடியை சேர்ந்த குமார்(29) என்ற வாலிபருக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் நாகராஜின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் போலீசாரிடம், தனது கணவர் சம்பவத்தன்று அதிக போதையில் வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது போதை தலைக்கேறிய நிலையில் சுவரில் தலையை முட்டி கொண்டதாகவும் கூறினார். நான் எவ்வளவோ கூறியும் அவர் கேட்காமல் தொடர்ந்து சுவரில் முட்டியதாகவும், அதில் அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

    இதற்கிடையே நாகராஜின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் நாகராஜ் உடலில் மின்சாரம் பாய்ந்திருப்பது தெரியவந்தது. இதனால் அவரை யாரோ மின்சாரம் பாய்ச்சி கொன்றிருக்கலாம் என சந்தேகித்தனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில், அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகமாடுகிறாரோ என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.

    அந்த கோணத்தில் சந்தேகத்தின் பேரில், நாகராஜின் மனைவி ராஜாமணி மற்றும் அவரது கள்ளக்காதலன் குமார் ஆகியோரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவர்கள் தான் கொலை செய்தனரா? அல்லது சுவரில் மோதிய போது தான் இறந்தாரா? எனவும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் இந்த சம்பவத்தின் முழு விவரமும் தெரியவரும்.

    இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×