search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூரில் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி கைது
    X

    பரமத்திவேலூரில் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி கைது

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • கணவனை மனைவியே இரும்பு சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கந்தநகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (40). இவர் பரமத்திவேலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு டீ கடையில் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கலா (36).

    விஜயகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த கலா கணவர் விஜயகுமாரை வீட்டில் இருந்த இரும்பு சுத்தியலால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் விஜயகுமார் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரின் தலையில் இரும்பு சுத்தியலால் தாக்கி கொலை செய்த மனைவி கலாவை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் பெண்கள் சிறையில் கலாவை அடைத்தனர்.

    கணவனை மனைவியே இரும்பு சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×