search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்.ஐ.சி.யில் புதிய ஜீவன் சாந்தி பாலிசி: பென்ஷன் விகிதங்கள் உயர்த்தி அறிவிப்பு
    X

    எல்.ஐ.சி.யில் புதிய ஜீவன் சாந்தி பாலிசி: 'பென்ஷன்' விகிதங்கள் உயர்த்தி அறிவிப்பு

    • இந்த திட்டம் ‘ஆப்லைன்' மற்றும் ‘ஆன்லைன்' மூலமாகவும் கிடைக்கிறது.
    • ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் பென்ஷன் அளிக்கப்படும்.

    சென்னை :

    எல்.ஐ.சி. மண்டல மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எல்.ஐ.சி. ஆப் இந்தியா கடந்த 5-ந்தேதி முதல் பென்ஷன் (ஆன்டியு) திட்டமான புதிய ஜீவன் சாந்தி பாலிசியில் வருடாந்திர பென்ஷன் விகிதங்களை உயர்த்தி உள்ளது. அதிக கொள்முதல் விலைக்கான ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒத்திவைப்பு காலத்தின் அடிப்படையில் கொள்முதல் விலை ரூ.1,000-க்கு ரூ.3 முதல் ரூ.9.75 வரையில் பென்ஷன் விகிதங்கள் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளன.

    ஒற்றை பிரிமீய திட்டமான இந்த பாலிசியில் பாலிசிதாருக்கு தனிநபர் மற்றும் கணவர், மனைவியுடன் கூடிய 'ஜாயிண்ட் லைப்' ஒத்திவைக்கப்பட்ட பென்ஷனை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

    இந்த பாலிசி, பணியில் இருப்பவர்களுக்கு அல்லது சுயதொழில் செய்பவர்களுக்கு, குறிப்பிட்ட ஒத்திவைக்கப்பட்ட காலத்துக்குப்பின் நிலையான பென்ஷன் வருமானத்தை அளிக்கக்கூடியது. முதலீட்டுக்காக உபரியாக பணம் வைத்திருப்போருக்கும் ஏற்றது.

    இந்த திட்டம் இளம் வயதினர் தங்களது ஓய்வுகாலத்தை சிறந்த வகையில் திட்டமிட வழிவகுக்கிறது. பாலிசியின் தொடக்கத்திலேயே வருடாந்திர பென்ஷன் விகிதங்கள் உத்தரவாதமாக அளிக்கப்படுகின்றன. ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் பென்ஷன் அளிக்கப்படும்.

    புதிய ஜீவன் சாந்தி திட்டத்தின் வருடாந்திர பென்ஷன் தொகையை எல்.ஐ.சி.யின் இணையதளம் மற்றும் பல்வேறு எல்.ஐ.சி. ஆப்களில் உள்ள கால்குலேட்டர் மூலம் கணக்கிடலாம். இந்த திட்டம் 'ஆப்லைன்' மற்றும் 'ஆன்லைன்' மூலமாகவும் கிடைக்கிறது.

    மேலும் விவரங்களுக்கு www.licindia.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது அருகில் உள்ள எல்.ஐ.சி. கிளையை தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×