என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபாச படம் பார்த்ததாக மிரட்டல்- போலீசார் போல் நாடகமாடி பணம் பறித்த 4 பேர் கைது
    X

    ஆபாச படம் பார்த்ததாக மிரட்டல்- போலீசார் போல் நாடகமாடி பணம் பறித்த 4 பேர் கைது

    • சந்திரகுமார் போன் பே மூலம் மூன்று தவணையாக மர்மகும்பல் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார்.
    • அதன் பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த சந்திரகுமார் இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பேரிகையை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது33), ஓசூரில் உள்ள ஒரு ஒரு ஜூவல்லரியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆக.29-ந்தேதி அன்று, இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

    அதில் பேசியவர்கள் சென்னை சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம். நீங்கள் ஆபாச படங்களை சமீப நாட்களாக பார்த்து வருவது குறித்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. அதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், 10 ஆயிரம் ரூபாய் உடனடியாக அனுப்ப வேண்டும் என மிரட்டி உள்ளனர்.

    அதை நம்பிய சந்திரகுமார் போன் பே மூலம் மூன்று தவணையாக அவர்களது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த சந்திரகுமார் இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் மர்ம நபர்கள் பேசிய செல்போன் எண்ணின் முகவரி போலி என்பதும், பாலக்கோடு அருகில் சிம்பார்டு விற்கப்பட்டதும் தெரிய வந்தது.

    பணம் எடுத்த வங்கி விவரத்தை போலீசார் விசாரித்த போது பணம் பெற்றவர், சேலம் மாவட்டம், கரடூர் மணிமுத்து என்பதும், அவரும் நண்பர்கள் 3 பேர் இணைந்து பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    யூ டியூப்பில் போலீஸ், வாக்கி டாக்கி சத்தத்தை வைத்து விட்டு அதன் பின்னர் செல்போனில் பேசி பணப்பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து சந்திரகுமாரிடம் மிரட்டி பணம் பறித்த தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சுங்கரஹள்ளி மால்லின் (22), மணிமுத்து (23), கிருஷ்ணகிரி மாவட்டம் சாப்பர்த்தி வேடியப்பன் (28), தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கீழ்வீதி மாரியப்பன் (35), ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன், வங்கி கணக்கு புத்தகம், டெபிட்கார்டுகள் 4 சிம்கார்டுகள் மற்றும் 6 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×