search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    • முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
    • டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் போல தமிழகத்திலும் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரத் துறையின் சார்பாக 31-வது கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் இதுவரை 12 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 87.7 சதவீதம் பேர்களும், 2-ம் தவணை தடுப்பூசி 55.9 சதவீதம் பேர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    15 வயது முதல் 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 89.4 சதவீதம் நபர்களும், 2-ம் தவணை தடுப்பூசி 74.4 சதவீதம் நபர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    மேலும் 65 ஆயிரத்து 253 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 910 தடுப்பூசிகள், தமிழ்நாடு மாநில அளவில் 76 லட்சத்து 89 ஆயிரத்து 40 தடுப்பூசிகள் என போதிய கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

    முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் போல தமிழகத்திலும் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதல் கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனைகள் விரைவில் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். அதேபோன்று புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் கட்டுவதற்கான பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் விரைவில் வெளியிடப்பட்டு 5 மாதங்களுக்குள் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 2,500 முதல் 2,700 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த மாதங்களாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

    மருத்துவத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பர் மாத இறுதிக்குள் 1,021 மருத்துவர்கள் உள்பட மொத்தம் 4,308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மதுரை பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×