search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுத்த ஆஸ்பத்திரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம்- அமைச்சர் பேட்டி
    X

    சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுத்த ஆஸ்பத்திரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம்- அமைச்சர் பேட்டி

    • சிறுமியிடம் கருமுட்டை எடுத்த திருப்பதி, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டது.
    • சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, ஆதார் அடையாள அட்டை திருத்தி கொடுத்த ஜான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் மருத்துவ துறை இணை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினரும் சிறுமி மற்றும் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர்.

    இதுதவிர சிறுமியிடம் கருமுட்டை எடுத்த திருப்பதி, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் இது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கொடுமை என்னவென்றால் கன்னி தன்மையுடன் இருப்பவர்களின் கருமுட்டை பயன்பெறாது என்பதால் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கருமுட்டையை எடுத்துள்ள செயல் கொடூரமான செயல் ஆகும்.

    இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனைகளின் தவறு நிரூபிக்கப்பட்டால் தயவு தாட்சனையின்றி அந்த மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இது சம்பந்தமாக சென்னை மருத்துவதுறை இணை இயக்குனரகத்தின் மருத்துவகுழு விசாரணை நடத்தியுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக மகப்பேறு மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    ஈரோட்டில் தொடர்ந்து கருமுட்டையை தானமாக கொடுத்து வந்த ஒரு பெண் தனது மகளையும் கருமுட்டை கொடுக்க வைத்துள்ளார். இதில் சிறுமியின் கருமுட்டை வலுவில்லை என்று கூறி சிறுமியின் வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுளளனர்.

    பொதுவாகவே ஒரு குழந்தை பிறக்கும்போதே ஆயிரக்கணக்கான கருமுட்டையுடன் பிறக்கும். அது பூப்பெய்தும்போதுதான் கருமுட்டை வளர்ச்சி அடைகிறது. பொதுவாகவே கர்ப்பப்பையின் இரண்டு பக்கங்களிலும் மாதத்திற்கு ஒரு கருமுட்டை உருவாகும். ஒரு மாதம் இடதுபக்கம் கருமுட்டை உருவானால் அடுத்த மாதம் வலது பக்கம் கருமுட்டை உருவாகும். இந்த கருமுட்டைகளை விந்தணுக்கள் துளைக்கும்போது கர்ப்பம் உருவாகிறது.

    எனவே கருமுட்டை வளர்ச்சி என்பது வேறு. பாலியல் தொல்லை என்பது வேறு. இதை தெரியாமலேயே சிறுமியின் கருமுட்டை வலுவில்லை என்று கூறி அவரது வளர்ப்பு தந்தை சிறுமியை பலமுறை கற்பழித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×