search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்மார்ட் சிட்டி திட்ட குறைபாடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு
    X
    கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் கே.என்‌.நேரு தலைமையில் நடந்தது. அருகில் அமைச்சர்கள் சு.முத்துசாமி மு.பெ‌.சாமிநாதன், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உள்பட பலர் உள்ளனர்.

    ஸ்மார்ட் சிட்டி திட்ட குறைபாடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு

    • நகர்ப்புறங்களில் குப்பை வரி வசூலிக்கப்படுவது மத்திய அரசு 2014 -ல் கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில்தான்.
    • ஈரோட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தின் கீழ் பைப்புகள் போடுவதில் சில இடங்களில் குறைபாடு இருந்தது. ஆனால் நகரில் குடிநீர் போதுமான அளவு வழங்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நகர்ப்புற உள்ளாட்சித் துறை அலுவலர்களுடன் அமைச்சர் நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் குறைபாடுகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது. உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அறிக்கை பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    2-ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அத்திட்டத்தின் கீழ் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அது கிடைக்கப்பெற்றதும் பணிகள் துவங்கும். தமிழக முதல்-அமைச்சர் நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டிற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

    அதன் கீழ் பல்வேறு குடிநீர், சாலை வசதி கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்த திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகளில் அது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாய்வில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கை வைத்துள்ளனர். அவைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகர்ப்புறங்களில் குப்பை வரி வசூலிக்கப்படுவது மத்திய அரசு 2014 -ல் கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில்தான். ஈரோட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தின் கீழ் பைப்புகள் போடுவதில் சில இடங்களில் குறைபாடு இருந்தது. ஆனால் நகரில் குடிநீர் போதுமான அளவு வழங்கப்பட்டு வருகிறது.

    கொரோனா காலக்கட்டத்தில் நகராட்சி கடைகள் வாடகை கட்டாததற்கு விலக்கு அளிக்கப்படாது. கடைகளின் வாடகையை நம்பிதான் நகராட்சிகள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஈரோடு மாநகராட்சி சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள், விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 964 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் 127 வண்டிகளை வழங்கினார்.

    Next Story
    ×