என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னிகைப்பேர் கிராமத்தில் தொடர் திருட்டு- வியாபாரிகள் போராட்டம்
    X

    கன்னிகைப்பேர் கிராமத்தில் தொடர் திருட்டு- வியாபாரிகள் போராட்டம்

    • கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
    • வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பஜார் வீதி உள்ள கடைகளில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் தொடர்ந்து திருடி வருகின்றனர்.

    கடந்த வாரம் கருப்புசாமி நாடார் மளிகை கடை,சபரி பேன்சி ஸ்டோர், ரத்னா ஸ்டோர்ஸ் ஆகிய கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தனர். மேலும்,ஏகாம்பரம் மளிகை கடையில் பூட்டை உடைத்து ரொக்க பணம் ரூ.50,000- கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்நிலையில்,நேற்று பஜார் வீதியில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோர் பூட்டை மர்ம நபர்கள் நள்ளிரவில் உடைக்கும் போது எதிர் வீட்டில் இருக்கும் துணிக்கடை வியாபாரி திருடன்,திருடன் என்று கூக்குரல் இட்டார்.இதனால் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வினோத்குமார், முனிரத்தினம் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

    இந்நிலையில்,வியாபாரிகள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பஜனை கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி விரைந்து வந்து வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். வியாபாரிகளின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதனால் வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சனையால் நேற்று காலை முதல் மதியம் வரையில் இப்பகுதியில் பதட்டமும்,பரபரப்பும் நிலவியது.

    Next Story
    ×