என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகைக்கடை உரிமையாளரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்: வியாபாரிகள் கடையடைப்பு - பரபரப்பு
    X

    நகைக்கடை உரிமையாளரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்: வியாபாரிகள் கடையடைப்பு - பரபரப்பு

    • பட்டுக்கோட்டையில் பொற்கொல்லர் சங்கம் மற்றும் நகைக்கடை உரிமையாளர் சங்கம் இணைந்து கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • திருச்சி கேகே நகர் குற்றப்பிரிவு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவரது உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று காலை கூடினர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடி தெருவில் நகைக்கடை நடத்தி வந்தவர் ரோஜா ராஜசேகர் (வயது58). இவர் தனது கடையில் திருட்டு நகையை வாங்கி வந்ததாக கூறி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார், பட்டுக்கோட்டை வந்து நகைக்கடையில் சோதனை நடத்தினர்.

    பின்னர் ரோஜா ராஜசேகர் மற்றும் அவருடைய மனைவி லெட்சுமி ஆகியோரை போலீசார் விசாரணைக்கு திருச்சிக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் பொற்கொல்லர் சங்கம் மற்றும் நகைக்கடை உரிமையாளர் சங்கம் இணைந்து கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ரோஜா ராஜசேகர், தன்னை போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றதால் மனமுடைந்தார்.

    நேற்று இரவு வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் பட்டுக்கோட்டை-அதிராம்பட்டினம் ரோடு செட்டியக்காடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில் முன் பாய்ந்து ரோஜா ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் சிதறியது.

    இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரோஜா ராஜசேகர் உடலை மீட்டு பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் ரோஜா ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கு காரணமான திருச்சி கேகே நகர் குற்றப்பிரிவு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவரது உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று காலை கூடினர்.

    ரோஜா ராஜசேகரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ராஜசேகரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, திருச்சி குற்றப்பிரிவு காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்விராஜ் சவுகான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.

    இதற்கிடையே ரோஜா ராஜசேகரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து பட்டுக்கோட்டை நகர வர்த்தக சங்கம், வணிகர் சங்க பேரமைப்பு, பொற்கொல்லர் சங்கம் மற்றும் தங்கம் வெள்ளி நகை வியாபாரிகள் சங்கம் கூடி இன்று ஒரு நாள் கடையடைப்பு செய்து நகரில் அமைதி பேரணி நடத்தினர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுஉள்ளது.

    Next Story
    ×