search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்போரூர் அருகே மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்: நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்
    X

    திருப்போரூர் அருகே மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்: நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்

    • வெங்கடேசன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • பலத்த காயம் அடைந்த அனிதா ரத்த வெள்ளத்தில் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே சாலையில் ஓடினார்.

    திருப்போரூர்:

    திருப்போரூர், கன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா (வயது 29). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசனுக்கு மனைவி அனிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

    இதன்காரணமாக அனிதா கணவருடன் கோபித்துக் கொண்டு திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில் உள்ள தன்னுடைய தாய்வீட்டிற்கு அடிக்கடி செல்வதும் பின்னர் வெங்கடேசன் சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தும் வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த வெங்கடேசன் மீண்டும் மனைவி அனிதாவிடம் நடத்தை தொடர்பாக பேசி தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் கத்தியால் மனைவி அனிதாவின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அனிதா ரத்த வெள்ளத்தில் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே சாலையில் ஓடினார். இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் அனிதா மயங்கி விழுந்தார்.

    இதுகுறித்து திருப்போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய அனிதாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அனிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே வெங்கடேசனை திருப்போரூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×