என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேர்வு எழுத ஆசிரியர்கள் உதவிய விவகாரம்- நிறுத்தி வைக்கப்பட்ட 32 மாணவர்களின் தேர்வு முடிவு வெளியீடு
- தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் சஸ்பெண்டான 5 ஆசிரியர்களிடம் முதன்மை கல்வி அதிகாரி முனியசாமி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
- தேர்வு நிறுத்தி வைக்கப்பட்ட 34 மாணவர்களின் 2 மாணவர்கள் மீதே அதிக சர்ச்சை எழுந்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி பிளஸ்-2 கணித தேர்வு நடந்தது. அப்போது தேர்வு எழுதிய சில மாணவர்களுக்கு, கண்காணிப்பு பணியில் இருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவியதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனியசாமி தலைமையிலான கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பள்ளியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு எழுத உதவிய காட்சிகள் பதிவாகி இருந்தன. அதன்பேரில் அறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலராக பணியாற்றிய சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு பிளஸ்-2 தேர்வு வெளியிடப்பட்டது. அப்போது அந்த பள்ளியில் தேர்வு எழுதிய 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் சஸ்பெண்டான 5 ஆசிரியர்களிடம் முதன்மை கல்வி அதிகாரி முனியசாமி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை அறிக்கை விவரங்கள் சென்னையில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்துக்கு அவர் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று மாணவர்களின் பெற்றோர் ஊட்டி கலெக்டர் அலுவலகம் வந்து முற்றுகையிட்டனர். தேர்வு முடிவு அறிவிக்கப்படாததால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே உடனடியாக தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் கூறி மனு கொடுத்தனர். அவர்களிடம் முதன்மைகல்வி அதிகாரி முனியசாமி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.
அப்போது அவர் விசாரணை அறிக்கை சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 2 நாட்களில் அதற்கான முடிவு தெரியவரும் எனவும் கூறினார்.
அவர் தெரிவித்தபடி தேர்வு நிறுத்தி வைக்கப்பட்ட 34 மாணவர்களின் 2 மாணவர்கள் மீதே அதிக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் அந்த 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்ற 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 31 பேர் தேர்ச்சி பெற்றனர். 1 மாணவர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை.