என் மலர்
உள்ளூர் செய்திகள்

எண்ணூர் அருகே நடைபயிற்சி சென்ற ராணுவ ஊழியர் லாரி மோதி பலி
- எண்ணூர் போலீசார் பலியான அருள்தாசனின் உடலை மீட்க முயன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
சென்னை, நொச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் அருள் தாசன் (வயது 45).பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி முகாமில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், எண்ணூர் தாழங்குப்பத்தில் வசித்து வரும் தங்கை வீட்டுக்கு நேற்று இரவு வந்தார்.
இன்று அதிகாலை எழுந்த அருள்தாசன், தாழங்குப்பம் சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது முகத்துவார ஆற்று மேம்பாலம் வழியாக தாழங்குப்பம் நோக்கி வந்த லாரி திடீரென அருள் தாசன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
உடனே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். விபத்து பற்றி அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
எண்ணூர் போலீசார் பலியான அருள்தாசனின் உடலை மீட்க முயன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கூறி அருள்தாசன் உடலை எடுக்க விடாமல் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் பின்னர் அருள்தாசனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






