search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்தோடு அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை
    X

    சித்தோடு அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை

    • வர்சா ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • கல்லூரி பெண்கள் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    பவானி:

    திருச்சி தீரன்நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு வர்சா(22), சுவிக்‌ஷா, அபூர்வா ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

    இவர்களது மூத்த மகள் வர்சா ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி பெண்கள் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் வர்சா தனது அறையில் யாரும் இல்லாத போது பேனில் சுடிதார் துப்பட்டாவில் தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் அவரது அறைக்கு வந்த மற்ற மாணவிகள் அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை திறக்க நீண்ட நேரம் சத்தம் போட்டும் வர்சா கதவை திறக்கவில்லை.

    இது குறித்து மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார் பார்த்த போது அறையில் வர்சா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதைபார்த்த மற்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் மாணவி வர்சாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தங்களது மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இது தொடர்பாக மாணவியின் தாய் சித்ரா சித்தோடு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி விடுதியில் தங்கியிருந்த எனது மகள் வர்சாவின் காதில் கடந்த 5-ந் தேதி வண்டு புகுந்து விட்டது. இதையடுத்து தனக்கு காது வலி அதிகமாக இருப்பதாக சொன்னார். இதையடுத்து நானும் எனது கணவரும் வந்து வர்சாவை வீட்டிற்கு அழைத்து சென்றோம்.

    பின்னர் காது வலி சரியானதால் கடந்த 12-ந்தேதி மீண்டும் கல்லூரியில் விட்டு சென்றோம். தினமும் போனிலும் பேசிவந்தோம். இந்த நிலையில் நேற்று மதியம் எங்களுக்கு போன் செய்த வர்சா காது வலியினால் தன்னால் இன்று சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் இரவு 9 மணியளவில் கல்லூரி முதல்வர் போன் செய்து வர்சா தூக்குப்போட்டு இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் வந்து மகளின் உடலை பார்த்தோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×