search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வினர் வீடுகளில் 13-ந்தேதி தேசியக்கொடி ஏற்றுங்கள்: எடப்பாடி பழனிசாமி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அ.தி.மு.க.வினர் வீடுகளில் 13-ந்தேதி தேசியக்கொடி ஏற்றுங்கள்: எடப்பாடி பழனிசாமி

    • அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
    • நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப்பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நமது இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகின்ற 15-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 'சுதந்திர தின அமுதப் பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

    சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், வரலாற்றின் சில குறிப்புகளைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு முதல் தேசியக் கொடியை ஏற்றி வைத்த நிகழ்வையும் நினைவுகூர்ந்தார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் 'சுதந்திர தின அமுதப் பெருவிழா' என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்துவரும் நிலையில், தங்களது வீடுகளில் தேசியக் கொடி என்ற இயக்கத்தின் மூலம் மேலும் தேசப்பற்றை வலுப்படுத்துவோம் என்றும், ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிடுங்கள் என்றும், இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

    இவ்வாறு ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுகளில் பறக்க விடப்படும் தேசியக் கொடியை, இரவில் இறக்குவதற்கு தேவையில்லை என்றும், மூன்று நாட்களும் பறந்தவாறே இருக்கட்டும் என்றும், அதற்கேற்றவாறு விதிகள் திருத்தப்பட்டுள்ளன என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    தேசியக் கொடி என்றவுடன் நமது நினைவுக்கு வருவது கொடி காத்த குமரன்' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திருப்பூர் குமரன் தான். அந்நியர் ஆட்சியில், நமது தேசியக் கொடியை காப்பதற்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த கொடிகாத்த குமரன் முதல் அனைத்து விடுதலைப் போராட்டத் தியாகிகளையும் தீரர்களையும் 75-வது சுதந்திர தின நன்னாளில் நினைவு கூர்வோம்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப்பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×